மக்களின் நகைகளைக் கையளிக்க ஐந்து வருடங்கள் சென்றது ஏன்?

விடுதலைப்புலிகள் கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு நடத்திவந்த நிர்வாகத்தில், நாட்டிலுள்ள அரச – தனியார் வங்கிகளைப்போன்று தாமும் தமிழீழ வங்கிகளை நிறுவி சேமிப்பு, தங்க நகை அடகு வைத்தல், கடன் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இறுதி யுத்தத்தின்போது அந்த வங்கிகளில் இருந்த நகைகள், ஆவணங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தன. எனினும், அந்தத் தங்க நகைகள் பற்றிய விவரங்களை அரசு வெளியிடவில்லை.

இந்த நகைகள் தொடர்பாக புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் மேற்குலக ஆதரவுக் குழுக்கள் இராணுவம் மீதும் ராஜபக்ஷ அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்த நிலையில், படையினரால் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை தாம் அரசிடம் ஒப்படைத் ததாக அப்போதைய இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சித் தலைவருமான சரத் பொன்சேகா ஒரு சமயம் தெரிவித்திருந்தார். புலிகளின் தங்கம் குறித்து நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.

புலிகளின் சிறிய தொகை தங்கம் மற்றும் பணத்தொகையே கிடைத்தது என்றும் அது திசேரியிடம் கையளிக்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பதில் அளித்தார். அமைச்சரின் பதிலிலும் போதுமான விளக்கம் இருக்கவில்லை. மூடுமந்திரமாக இந்தத் தங்க நகை விவகாரம் கடந்த ஐந்து வருட காலமாக இருந்தது. தற்பொழுது முதல் தடவையாக ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயத்துடன் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புலிகளிடம் இருந்து – அதாவது, புலிகளின் வங்கிகளில் இருந்து கைப் பற்றப்பட்ட பொதுமக்களின் 2,352 தங்க நகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. முதற் கட்டமாக 25 பேருக்கு தங்க நகைகளை வழங்கி இருக்கிறார் ஜனாதிபதி.

புலிகள் இயக்கத்தால் நிர்வகிக்கப்பட்டுவந்த தமிழீழ வங்கி மற்றும் ஈழ அடகு வங்கிகளிலும் மற்றும் வங்கிகளிலும் யுத்த காலத்தில் வட பகுதி மக்கள் தங்க நகைகளை அடகு வைத்திருந்தனர். இந்த நகைகள் இந்த வங்கிகளில் தனித்தனியாகப் பொதிசெய்யப்பட்டு ஆவணங்களுடன் பாது காப்பாக வைக்கப்பட்டிருந்தன என்று தெரி விக்கப்படுகிறது. இவையே யுத்தத்தின் இறுதிப்பகுதியில் படையினரால் கைப்பற்றப்பட்டு கொழும் புக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பகு தியே தற்பொழுது கிளிநொச்சியில் வைத்து ஜனா திபதியால் கையளிக்கப்பட்டுள்ளன. தாலிக்கொடிகள், சங்கிலிகள், காப்புகள் என்பனவும் இவற்றுள் அடங்கும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக சரியான உரிமையாளர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும் இதன்படி புலிகளின் வங்கிகளில் அடகுவைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்த 2,352 உரிமையாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட் டுள்ளனர் என்றும் எஞ்சிய தங்க நகைகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவம் கூறுகிறது. இந்த நகைகள் முயாக ஆவணப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவம் கூறுகிறது. ஆகவே, இந்தத் தங்க நகைகள் பொதுமக்களுடையவை என்று தெரிந்தும் கடந்த ஐந்து வருடங்களாக அவற்த் திருப்பி ஒப்படைக்க அரசு தவறி யுள்ளது.

‘கையளிக்கப்பட்ட தங்கம்போக மிகுதி தங் கத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஜனா திபதி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு மக்களின் தங்கத்தை இவ்வளவு காலம் மமுகமாக வைத்திருந்தது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, ஜனாதிபதி இந்தக் குற்றத்துக்கு முகம் கொடுக்கத் தயாராக உள்ளாரா?” இப்படி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் ஜனாதிபதி மீது வழக்குத் தொடுக்க முடியாது என்ற பாதுகாப்புக் கவசத்தைக் கழற்றி வைத்து விட்டு தமது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வருமாறும் ஜனாதிபதிக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்தோர், சொத்துகளை இழந்தோர் ஆயிரக்கணக்கானோர். எதுவித வாழ்வாதாரங்களும் இன்றி இவர்களில் பலர் துன்பத்தில் வாழ்ந்துகொண்டி ருக்கின்றனர். இவர்களின் நகைகளை முன்னரே கொடுத்திருந்தால் பலரின் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். எஞ்சிய நகைகளையாவது உரிமையாளர்களிடம் துரிதமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template