இந்தியாவில் இருந்து வெளியேறும் NOKIA நிறுவனம்

நவம்பர் 1ஆம் தேதி முதல் சென்னையிலிருக்கும் தனது தொழிற்சாலையை மூடப்போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த தொழிற்சாலையில் தயாராகும் மொபைல் போன்களை வாங்கும் ஒப்பந்தத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ரத்து செய்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


2014 நவம்பரில் இருந்து இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக நோக்கியா நிறுவனத்திடம் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.


மைக்ரோசாஃப்டிடமிருந்து மேலும் தயாரிப்புக்கான ஆர்டர்கள் வராத நிலையில், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஸ்ரீபெரும்புதூரிலிருக்கும் ஆலையில் மொபைல் போன் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்படும் என நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நோக்கியா நிறுவனமானது தனது உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவான “டிவைசஸ் அண்ட் சர்வீசஸ்” நிறுவனத்தை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு 2014 மார்ச் மாதத்திற்குள்ளாக 7.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்போவதாக நோக்கியா நிறுவனம் 2013 செப்டம்பரில் அறிவித்தது. இந்தியாவிலிருக்கும் சொத்துகளும் இதில் அடக்கம்.


2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோக்கியா தனது தொழிற்சாலையை சென்னையில் திறந்தது. மத்திய கிழக்கு, ஆஃப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் இருந்த சந்தைகளுக்கு இங்கிருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.


வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மொபைல் போன்களை உள்நாட்டுச் சந்தையிலும் விற்றதாகக் கூறிய தமிழ்நாடு அரசு, அதற்காக 2,400 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.


மற்றொரு வரி வழக்கில், ஆலையை மைக்ரோசாஃப்டிற்கு மாற்றுவதற்கு முன்பாக 3500 கோடி ரூபாய்க்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆகவே, இந்த்த் தொழிற்சாலையை கைமாற்றாமல், மொபைல் போன்களை உற்பத்தி செய்து தருவதாக மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இருந்தபோதும், தொடர்ந்து சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதால், ஆலையை முழுமையாக இயங்கச் செய்ய முடியாத நிலை இருப்பதாக நோக்கியா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

தற்போது அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பெரிதாகப் பாதிக்கப்படாத வகையில் என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்ந்துவருவதாகவும் நோக்கியா தெரிவித்துள்ளது.

தற்போது நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. ஆலை முழுவீச்சில் இயங்கியபோது அங்கு சுமார் 6,600 பணியாளர்கள் பணியாற்றிவந்தனர்.

கடந்த மார்ச் மாதம் நோக்கியா நிறுவனம் தானாக முன்வந்து பணியிலிருந்து செல்லும் வாய்ப்பை வழங்கியபோது, சுமார் 5000 பேர் அதனைத் தேர்வுசெய்ததாக சொல்லப்படுகிறது.  b b c
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template