கடந்த 21 நாட்களாக அ.தி.மு.க., பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தரப்பில் ஜாமின் கேட்டு, பெங்களூரு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடியானது.
அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று 63வது மனுவாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தத், நீதிபதிகள் மதன் பி லோகூர், சிக்ரி ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்ச் ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை விசாரித்தது.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரர் என்ற முறையில், இந்த வழக்கில் தன்னுடைய கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா ஜாமின் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கியது. அதில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமின் வழங்கியும், தண்டனையை நிறுத்தி வைத்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மேல் முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழக்கு விசாரணையை முன்னிட்டு பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்திருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப்ரமணியசாமி,
'ஜெயலலிதாவிற்கு சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இவர் வீட்டிலேயே தான் இருக்க வேண்டும், கட்சியினரை சந்திக்க கூடாது,' என்றார். மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை கவர்னர் ரோசையா கண்காணிக்க வேண்டும். அதேவேளையில், தனது கட்சியினருக்கு தேவையான கட்டுப்பாடுகளை ஜெயலலிதா விதிக்க வேண்டும்,' என்றார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment