தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை தமிழக சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான விரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்..
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பாரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை சந்திப்பதற்கு அதிமுக தொண்டர்களும், சட்டத்தரணிகளும் செல்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தங்கியுள்ள அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், பாதுகாப்பிற்கு அதிகளவு பொலிஸ் படை பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் பொலிஸாரை வேறு பணிகளுக்கு ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதே சிறந்தது எனவும், அதில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை எனவும் தேவ கவுடா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இரு மாநிலங்களினதும் வானிலை வேறென்பதால், ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்படலாம் என மத்திய இணை அமைச்சரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஜெயலலிதா ஜெயராமை விடுதலை செய்வதில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலையீடு செய்ய வேண்டுமென மதுரை ஆதினம் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா ஜெயராமை விடுதலை செய்வதன் மூலமே, தமிழகத்தில் அமைதியான சூழ்நிலையை நிலைநாட்ட முடியுமெனவும் மதுரை ஆதீனம் சுட்டிக்காட்டியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஜெயலலிதா ஜெயராமின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடம்பெறும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment