இன்றாவது பிணை கிடைத்து விடுதலை பெறுவாரா ஜெயலலிதா?

நேற்று வியாழக்கிழமை ஜெயலலிதா சார்பில் மட்டும் பிணை கேட்டு உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த பிணை மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து விட்டதால், ஜெயலலிதா சார்பில் நேற்று உயர் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றில் பிணை கிடைக்காமல் போனதற்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பிணை மனுக்கள் தாக்கல் செய்ததுதான் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

முதலில் ஜெயலலிதா மட்டும் பிணை மனு தாக்கல் செய்திருந்தால், வயது, உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு பிணை கிடைத்து இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு மற்ற 3 பேரும் ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து பிணை பெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே நேற்று ஜெயலலிதா சார்பில் மட்டும் பிணை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வக்கீல் ஜெய் கிஷோர் என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நான் ஒரு பெண்மணி. 66 வயதான எனக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றதால் எனக்கு உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. நான் முதலமைச்சராக இருந்த போது இந்த வழக்கு தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் எதுவும் செய்யவில்லை.

தனிக்கோர்ட்டால் விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, தனி நீதிமன்ற தண்டனையாக விதித்துள்ள 4 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் என்னுடைய பிணை மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பிணை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள பல்வேறு வரையறைகளை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்திருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டு இருப்பது கடுங்காவல் சிறை தண்டனை அல்ல, சாதாரண தண்டனைதான். இதற்கு பிணை வழங்குவதில் உள்ள நடைமுறைகளை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது.

எனவே, நான் 66 வயதான பெண் என்பதையும், உடல் ரீதியாக எனக்கு உள்ள பல்வேறு உபாதைகளையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் பிணை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தனது பிணை மனுவை அவசர மனுவாக கருதி இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

உயர் நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த பிணை மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template